Sunday, May 18, 2014

விருத்தாச்சலம் திருக்கோவில்

சந்திரிகா சுப்ரமண்யன்

சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. . இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம் என்று புராணங்கள் கூறுகின்றன. உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக் காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் ஆன்ந்தத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.  இங்குள்ள அர்த்த மண்டபத்தில்  நான்கு வேதங்களே நான்கு தூண்களாக  அமைந்துள்ளன. முருகன் சிவனை பூஜித்த தலம் இது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்  ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற தலம்.
மூலவர் பெயர் விருத்தகிரீசுவரர்- முதியவர் –, முதுகுந்தர் என்றும் அழைக்கப்படுவார். அம்மன் பெயர் விருத்தாம்பிகை , பாலாம்பிகை - இளைய நாயகி.



"விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்'  என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை எனப் பபொருளுடையது.அக் காலத்தில் இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டதுசிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான்   தோன்றினார் என்றும், அதன் பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், இம் மலை திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
 
விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.
இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் ஆற்றிலிட்ட  பொன்னை குளத்தில் எடுத்த அற்புதம் நடத்திய திருத்தலம்."மணி முத்தா நதியில் பொன்னை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள்' என்று சொல்ல சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி. சாட்சி சொன்ன விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு இங்கு விளங்குகிறார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அதாவது தானாகவே  தோன்றியவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம். இத்தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. திருவண்ணாமலை போலவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.
பாலாம்பிகை :  ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார்.   அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல  பெரியநாயகியிடம் சோறு வேண்டி, "கிழத்தி' என்ற சொல் வரும்படி  ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி  வேடத்தில் அங்கு வந்து, ""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்?   இளமையுடன் இருந்தால் தான் நீ  கேட்டது கிடைக்கும்,''என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர்,"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்த்தனால் அன்று முதல் "பாலாம்பிகா' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.
இக்கோயிலில் எல்லாமே ஐந்து எண்ணில் தான் அமைந்துள்ளன. என்பதுவும் சிறப்பாகும்.
ஐந்து இங்குள்ள மூர்த்தங்கள் ஐந்து அவை , விநாயகர், முருகன், சிவன்,சக்தி,சண்டிகேஸ்வரர்.

இறைவனின் திருநாமம் ஐந்து  அவை :விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர்,  விருத்தகிரி.

ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர்,  முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.

இங்குள்ள இறைவனை தரிசனம் கண்டவர்  ஐவர், அவ்ர்கள் உரோமச முனிவர், விபசித்து   முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.

ஐந்து இங்குள்ள கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.

ஐந்து இங்குள்ள பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய  திருச்சுற்று,  வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று,பஞ்சவர்ண திருச்சுற்று.

ஐந்து இங்குள்ள கொடிமரம்: இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு  இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று  பெயர்.

ஐந்து இங்குள்ள உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.

ஐந்து இங்குள்ள வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம்,     நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.

ஐந்து இங்குள்ள வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.

ஐந்து இங்குள்ள தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர்,  பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.

இத்தலத்தின் ஐந்து பெயர்கள் : திருமுதுகுன்றம், விருத்தகாசி,  விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.
முக்திதலம் :  காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள  வழிபட்டால், காசியில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே  இத்தலம் "விருத்தகாசி' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத்  தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சமடைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.

இப்படி மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றினாலும் சிறப்புடையது விருத்தாச்சலம் கோவில்.
.




அமெரிக்கப் படைத் தளம் ஆஸ்திரேலியாவில் வியாபிகின்றதா?



அமெரிக்கப் படைத் தளம் ஆஸ்திரேலியாவில் வியாபிகின்றதா?
வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா  சுப்ரமண்யன்

ஆஸ்திரேலிய வான் படை பலத்தினை அதிகரிக்கும் முகமாக ஐம்பத்து எட்டு  F 35  ரக போர் விமானங்களுக்காக சுமார் 24 பில்லியன் டாலர்களை பிரதமர் டோனி அப்பொட் ஒதுக்கியுள்ளது பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தனது இந்த முதலீட்டை நியாயப்படுத்த டோனி அப்பொட் “ அடுத்த நிமிடம் நாம் இருக்கும் இடத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத சூழலில் நாம் இருக்கிறோம், எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று  நமது வான் படையை வலுவாக்கும் நோக்குடன் இந்த விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன’ என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

எதிர் கட்சி தலைவர் பில் ஷோர்ட்டன் ’நமது பாதுகாப்பு படைக்கு வளம் சேர்க்க நீண்ட கால தொலை நோக்கில் , இம் முதலீடு அவசியம் தான் என்று  நியாயப்படுத்தி  இருக்கிறார். ஆஸ்திரேலிய பாராளுமன்ற லிபரல் உறுப்பினர் டென்னிஸ் ஜென்சென் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரீன் கட்சியின் தலைவர் அடம் பேண்ட் ’ஆஸ்திரேலியாவில் பட்ஜட்டில் துண்டு விழும் கால கட்டத்தில் ஓய்வூதியம் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டுமேயொழிய உதவாக்கரை விமானங்கள் அல்ல’ என்று சீறியிருக்கிறார்.
இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்திற்காகவும் , ஊனமுற்றோர் , முதியோர் பராமரிப்பு போன்றவற்றுக்கு  ஒதுக்கப்படும்  நிதி  குறைக்கப் பட்டு வரும் இவ்வேளையில் இத்தகைய பாரிய பாதுகாப்பு செலவு விமரிசனங்களுக்கு உள்ளாகியுள்ளது.அதே சமயத்தில் மாறி வரும் உலக நடப்புக்கள் மற்றும் ஆஸ்த்திரேலியாவுக்கு  அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பொது மக்களின் விமர்சனங்கள் குறைவாகவே உள்ளன.

புதிதாக வருகின்ற இந்தப் போர் விமானங்கள்  அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. 2020 இல் இவை படையில் சேர்க்கப்படும் இவற்றை பயன் படுத்த தேவைப்படும் முதலீடு 54 பில்லியன் டொலர்கள் ஆகும்.
எல்லாவற்றையும் மீறி F 35  ரக போர் விமானங்களின் வருகை ஒன்றை உறுதிப் படுத்தி  உள்ளது. இவை இனி வரும் போர்களில் அமெரிக்கவுடன் இணைந்து பணியாற்ற ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கும் வசதிகளில் முதல் கட்டமாகும்.

அமெரிக்க தளம் ஆஸ்திரேலியாவில் இயங்குகிறது 2011 இல் சீன அரசு என்று குற்றம் சாட்டியது. பின் 2012 இல் வெளியுறவு அமைச்சர் பொப் கார் தனது அரசியல் கொள்கைகளில் முதலிடம் பிடிப்பவை , அமெரிக்கா தனது பிராந்தியத்தில் ஈடுபட்டிருத்தலும், ஆசியாவுடன் ஆஸ்த்திரேலியாவுக்கு உள்ள  உறவினை மேம்படுத்துவதும் ஆகும் என்றார். இது அமெரிக்காவுடனும்,  சீனாவுடனும் ஆஸ்த்திரேலியா நிலையான உறவைப் பேண அவர் காட்டிய ஆர்வத்தையே சுட்டிக் காட்டியது. ஆனாலும் அமெரிக்கவும் சீனாவும் வேறு தளங்களில் ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடையவை. அமெரிக்கா படைபலத்தையும்  சீனா பொருளாதார பலத்தையும் ஆஸ்திரேலியாவுடன் தொடர்பு படுத்திக் கொண்டன. இரண்டையுமே சமமாக னடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருக்கின்றது.

‘அவுஸ்மின்’ என்ற ஆஸ்திரெலிய அமெரிக்க அமைச்சர்கள்  கூட்டு  பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து , 2012 இல் அமெரிக்க ராணுவப் படை, தளவாடங்கள், தொழில் நுட்பம் அனைத்துமே ஆஸ்திரேலிய மண்ணில்  இடம் பிடித்துக் கொண்டன.குறிப்பாக மூன்று விடயங்கள் 1.வட மேற்கு கேப் – வான் ராடர் அதி நவீன  தொலை நோக்கி  2. (மைக்ரோ சாட்டிலைட்டு) நுண் செயற்கை கோள்களை கண்டு பிடிக்க கூடிய அமெரிக்க தொலை  நோக்கி 3. இரு நாடுகளும் பரஸ்பரம் செயற்கை கோள்களை பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட கூட்டு தொடர்பு வாசல் அனுமதி ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப் பட்டது .இதனால்  அவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களை ஆஸ்திரேலியா நேரடியாக பெற்றுக் கொள்ளும் வசதிகள் கிட்டின. ஆனால் இவை எல்லாம்  நடந்த கால கட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் அமெரிக்கப் படைத் தளம் இங்கு இல்லவே இல்லை என்று அடித்துக் கூறினார்.

இந்த கூட்டமைப்பு தொடர்பில் இருந்து நியூசிலாந்து விலக்கப்பட்டது.இதனால் நியூசிலாந்து நாட்டில் எந்த பாதுகாப்பு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை. நியூசிலாந்து அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வது அவசியமில்லை என்பது  பற்றி மிகத்தெளிவாக உள்ளது. தமது நாடு மிகச் சிறிய நாடு எனவும், தனியாக ஒரு படை பலம் தேவை இல்லை எனவும், எந்த நாட்டுடனும் தாம் இணக்கத்துடன் வாழவே விரும்புவதாகவும், தமது வளங்களை  பாதுகாப்புக்கு செலவிடுவதை விட தேசிய மேம்பாட்டுக்கு செல்விடுவதே உசிதமான கொள்கை  என்று  தனது நிலைபாட்டை வெளிப்படையாகவேத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நியூசிலாந்துக்கும் சேர்த்துதான் பலன் கிட்டும் என்று வாதிடலாம். ஆனால் நியூசிலாந்து தன் இறைமையை மகா ராணி எலிசெபெத் முதல் பராக்கா ஒபாமா வரை தெளிவு படுத்துவதில் தவறுவதில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியா அமெரிக்காவின்  அடியொற்றி நடக்கத் தவறுவதில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கிழக்கு திமோரில் தலையிட்டதனால் ஆஸ்திரேலியா இந்தனேசியாவை பகைத்துக் கொண்டது அதனால் ஒரு நிரந்தர அச்சம் அரசுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. பூகோள ரீதியில் இந்தனேசியா அமைந்துள்ள இடம் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அரசு இந்தனேசியாவில் செய்த உளவு வேலை அம்பலமானதும், இந்தனேசியா தனது தூதரை திருப்பி அழைத்துக் கொண்டது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் தனக்கு இருந்த ஆட் கடத்தல், ராணுவ பயிற்சிகள், உளவுத்துறை ஆகிய அனைத்து உடன் படிக்கைகள் தொடர்பாகவும் மீள் பரிசீலனை செய்யப் போவதாகவும் இந்தனேசியா அறிவித்தது. இது தொடர்பான டோனி அப்பொட்டின் பேச்சு அத்தனை திருப்திகரமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.கிழக்குத் திமோர் பிரச்சனைக்கு பின் ஒரளவு சுமுகமாக இருந்த இரு நாட்டு உறவு மறுபடியும் சிக்கலில் முடிந்தது.

பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா எதிர்நோக்கக் கூடிய ஒரே பிரச்சனை  இந்தனேசியா தான் என்பது அரசியல் விமர்சகர்ம=கலீன் கருத்தாகும்.

தவிர ஜப்பான் சீன உறவில் ஆள் இல்லாத ஏழு தீவுகள் தொடர்பாக விரிசல் விழுந்துள்ளது. அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கோ ஏற்றுமதி,இறக்குமதி,  சுரங்கம் , மற்றும் முதலீடுகள் போன்ற  பொருளாதாரக் காரணங்கள் சார்ந்து  சீனாவுடன் உறவு அத்தியாவசியமாகிறது.அதே சமயம் அமெரிக்க கொள்கையே ஆஸ்திரேலியாவின் கொள்கை என்ற தீவிர  நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த இக்கட்டுக்கள் தான் ஆஸ்திரேலியா தன் படை பலத்தைக் கூட்டுவதற்கு அடிப்படை காரணம் என்று  நம்பப் படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் படைபலப் பெருக்கல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.எதாவது ஒரு கால கட்டத்தில் தனக்கு சீனா அல்லது இந்தனேசியா தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தால் அதனைச் சமாளிக்க இப்போதே ஆஸ்த்திரேலியா தயார் ஆகின்றது.

தவிர, அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய  நிலைகொள்ளல் பலப்படுத்தப் படுகிறது.வியட்னாம் போரின் பின் 2011 ஆம் ஆண்டு தான் ஜுலியா கில்லர்ட் அரசின் கீழ் தான் அமெரிக்க கடற்படைக்கு இடம் கொடுக்கப்பட்டது.அமெரிக்கா கூட்டு என்பது ஆஸ்திரேலியாவுக்கு மனித உயிர்கள் மற்றும் சர்வதேச உறவுகளை விலையாகக் கொடுத்து கிடைக்கக் கூடிய ஒன்றே. அமெரிக்கா தனது அரசியல் ஆக்கிரமிப்பை ஈடுபடுத்தி அதன் மூலம் தனது பொருளாதாரத்தை பலப்படுத்த முயற்சிக்கும் ஒரு நடத்தையே பிராந்திய படை பலம் விரிவாக்கலாகும். அமெரிக்க சகாப்தம் என்பது நடைமுறையில் தோல்வியைத் தழுவி வருவது சர்வதேச அரங்கில் கண்கூடு. போர்கள் மக்களை சலிப்படையச் செய்துவிட்டன. தலைவர்கள், அரசியல் பம்மாத்துக்கள் பொய்த்து  விட்டன. பலப் பரீட்சைகள் களைப்படைய செய்து விட்டன.
இனி வரும் காலத்தில் ராணுவ கூட்டு முயற்சிகள் பலன் அளிக்காமல் போய் அமைதிக்கான கூட்டு முயற்சிகள் மட்டுமே வரவேற்கப்படும் காலம் வரும். அப்போது ஆயுத வியாபரங்கள் , அரசியல் நரித்தனங்கள்  நசிந்து போய் விடும். இந்த உண்மையை ஆஸ்திரேலியா உணராமல் போனது துர்பாக்கியமே. இன்று அமெரிக்க படையினரின் உள் நுழைவு பின் நாளில் ஆஸ்திரேலியா  கொடுக்க உள்ள பெரும் விலைக்கு வித்தாகும்.
(lawyer.chandrika@gmail.com)

மொரீஷியசில் தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் மாநாடு

மொரீஷியசில் தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் மாநாடு

தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் கலாச்சார பாதுகாப்பு தொடர்பாக முதல் சர்வதேச மாநாடு வரும் ஜூலை மாதம் 23-25 வரை மொரீஷியசில்  நடக்க உள்ளது..
சென்னை ஆசியக் கல்வி மையமும், மொரீஷீயஸ் மகாத்மா காந்தி மையமும் இணைந்து  நடத்தும் இந்த மா நாட்டிற்கு மொரீஷீயஸ் அரசு ஆதரவு  வழங்குகிறது.இந்த  நிகழ்ச்சியில் உலகெங்கிலும் வாழும் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கு காரண கர்த்தாவான சென்னை ஆசியக் கல்வி மையத்தின்  நிறுவுனர் டாக்டர் ஜோன்  சாமுவேல்இந்த  முயற்சி உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணக்கும் ஒரு முயற்சிஎன்றார். மொரீசியசை சேர்ந்த யுனெஸ்கோ பிரதி நிதியும் , ரெயின் போ அமைப்பின் நிறுவனருமான பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் இந்த மாநாட்டின் பொறுப்பாளர்.சீனா,ஸ்கொட்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுரை ஆற்றுகின்றனர்.

இலங்கையிலிருந்து ராசையா மகேஸ்வரன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் தனித்துவமான கலாச்சார விழுமியங்கள் என்ற தலைப்பிலும்,இலங்கைத் தமிழர்களின் மதம் மற்றும் கலாச்சாரம் இங்கிலாந்தில் அளிக்கும் பங்கு பற்றியும் ஆய்வு கட்டுரை வழங்குகின்றனர். தமிழ் ஆஸ்திரேலியனின் ஆசிரியரும்வழக்கறிஞரும் ,   ஊடகத் துறையில்  கலாநிதி பட்டம் பெற்றவருமான  சந்திரிகா சுப்ரண்யன்தாயகம் கடந்த தமிழ் ஊடகம்என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கிறார்.




மூன்றாம் பாலி’னத்துக்கு இந்தியாவில் அங்கீகாரம்

’மூன்றாம் பால்’ என அங்கீகரித்து திரு நம்பிகளுக்கும்,  திரு நங்கைகளுக்கும் சமூகத்தின் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்  என இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு இந்தியாவை உலக அரங்கில் புதிய கோணத்தில்  பார்க்க வைத்திருக்கிறது.
இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கோரி, தேசிய சட்ட மையம் தொடுத்த பொதுநல மனு மீதான வழக்கில் வழங்கப்பட்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு. அத்துடன் திருநங்கைகளை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சகல உரிமைகள், சிறப்பு உரிமைகள் அனைத்தையும் வழங்குவதோடு மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது.எந்த ஒரு பாவமும் செய்யாமல் பிறப்பின் தவறால் பால் மாறும் மனிதர்கள் தங்கள் விருப்பப் படி வாழ்க்கையை வாழும் உரிமையை இந்தத் தீர்ப்பு பெற்று தந்திருக்கிறது.
திரு நங்கை அல்லது நம்பிகள் பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாத காரணமும், தம் குடும்பங்களில் இத்தகைய பால் மாற்றம் ஏற்படும் போது அதை சரியாக கையாளத் தெரியாத அறியாமையும்  இன்று ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்த குடும்பங்களில் நிலவுகின்றன.

மகாபாரதத்தில் சிகண்டி, இந்திரனின் சாபத்தால் பெண்ணாக மாறிய பாங்கக்ஷ்வன ராஜன் , எதிர்பாராமல் கர்ப்பமுற்று, பிள்ளைப் பெற்ற யுவனஷ்வ ராஜன் போன்றோரை  நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. விஷ்ணு  மோகினியாக  மாறி  சிவன் மேல் காதல் கொண்டதும்,பிருந்தாவனத்தில் சிவபெருமான் பால்காரியாகி கிருஷ்ணருடன் ராசலீலை ஆடியதும் ,ராதையின் மேல் காதலாகி  கிருஷ்ணர்  பெண் வேடம் அணிந்ததும் நமது புராணம் சொன்ன உண்மைகள்.  குஜராத்தில் கடவுளான பகுசர்ஜீயும் , தமிழகத்தில் கூத்தாண்டவரும் திருநங்கையர்களை ஆசீர்வதிக்கும் போது நாம் மட்டும் சபிப்பதேனோ?