Friday, February 13, 2015

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அளித்த கட்டுரையின் காட்சி வில்லைகள்

ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அளித்த கட்டுரை

புலம் பெயந்த நாடுகளில்
மரபு காப்பதில் தமிழர்கள் எதிர் நோக்கும் நடை முறைச்சிக்கல்கள்

 கலாநிதி  சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் நிவாசினி சுப்ரமண்யன்



முன்னுரை
மொழியும் , மற்றும் கலாச்சாரமும்,இன அடையாளமும் ஒத்த மக்கள் உலகின் பாகங்களில் பரந்து வாழும் போது ’’டயஸ்போரா என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். 'Diaspora ' என்ற ஆங்கில வார்த்தை, பாபிலோனியப் படையெடுப்பினால் ஜெருசலேத்திலிருந்து வெளியேறி, இன்று இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களைக் குறிக்கப் பயன்படும் சொல். இன்று உலகளாவிய ரீதியில் ஏறக்குறைய ஐம்பது நாடுகளில் எழுபது மில்லியன் தமிழர்கள் புலம் பெயந்து கால்பதித்து இருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் மொழி, பண்பாடு, பாரம்பரியம் கலாச்சார விழுமியங்களை பேணுவதற்கு அவர்கள் தவறுவதில்லை. தொழில், கல்வி, வாணிபம், அடிமைத் தொழில் மற்றும் உள் நாட்டு போர் போன்ற காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்து உலகின் பல்வேறு பாகங்களிற்கும் தமிழர்கள் சென்றுள்ளனர்.

இப்படி உலக சக்தியாக விளங்கும் தமிழினம் தனது பாரம்பரியத்தையும் , கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கைப் பிடித்துத்தர விழைகிறது. அப்படி செய்வதனால் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வாழையடி வாழையாக தழைக்கும் என்றும் நம்புகின்றது.

ஆஸ்திரேலிய தமிழர் கலாச்சாரம்  ஓர் அறிமுகம்
உலகில் வாழும் தமிழர்களில் பிரிட்டனில் 300,000 பேரும், அமெரிக்காவில் 300,000 பேருக்கு அதிகமாகவும், கனடாவில் 300,000 பேருக்கு அதிகமாகவும்,ஆஸ்திரேலியாவில்  ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேரும்  வாழ்கின்றனர்.

ஆஸ்திரேலிய  நாட்டிற்கு வந்த புலம் பெயர்ந்த தமிழர்களில் அநேகமானோர் இலங்கைத் தமிழராவர்.மற்றையவர்கள் இந்தியா, மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களாவார்கள். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களால் தமிழர்களது மொழி, கலை, பண்பாட்டு மரபுகள் ஆகியவை பாதுகாத்து வரப்படுகின்றன. பல்லின , பல் கலாச்சார சூழலில் வாழும் ஆஸ்திரேலியத் தமிழர்கள், வேற்றுக் கலாச்சாரத்தில் தமிழ் கலாச்சாரத்தைப் பேணுவது மிகச் சிக்கலானதும் சவால் மிக்கதும் ஆகும்.

ஆஸ்திரேலியாவின் ஆறு மாநிலங்களில் வாழும் தமிழர்களில் பெருந்தொகையானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும், அடுத்து விக்டோரியா மாநிலத்திலும், மூன்றாவதாக குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் வசிக்கின்றனர். தற்போது மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலும் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்த மாநிலங்களில் எல்லாம் கலை, பண்பாடு வளர்க்கும் பணிகளில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை  பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்.

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு பேணுதலில் தமிழர்களின் பங்களிப்பு
இருபதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் மற்றும் கிறித்துவ, கத்தோலிக்கதேவாலயங்களில் வழிபாடு தமிழில் நடத்தப்படுகின்றன.

வார இறுதியில் தமிழ் கற்பிக்கும் சிறப்பு தமிழ் பாடசாலைகள் இருபது இந்திய இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இங்கு தமிழ் போட்டிகள், தமிழ் விழாக்கள், தமிழ் கலாச்சார நிகழ்வுகள், ஆகியவை ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. மேல் நிலைப்பள்ளி  தேர்வில் தமிழ் ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

ஏறத்தாழ  அரசியல் சார்பற்ற ஐம்பது தமிழ் அமைப்புக்கள் இருக்கின்றன.கடந்த சில ஆண்டுகளாக பொங்கல், சித்திரைத் திருவிழா , ஆகிய விழாக்கள் ப்ரிஸ்பேன், சிட்னி, மெல்பேர்ண் ஆகிய பெரு நகரங்களில் நடத்தப்படுகின்றன.

சிட்னி, மெல்பேர்ண் நகர்களின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில்   வணிக செயல்பாடுகள்   மேலோங்கியுள்ளன. உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள், தங்க நகைதுணிக் கடைகள், எனத் தமிழர் வாழ்வியலுக்குத் தேவையான கலாச்சாரம் சார்ந்த  பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும்  தமிழ் நிறுவனங்கள் உள்ளன.

ஊடகங்கள் வளர்க்கும் தமிழர் கலாச்சாரம்
தமிழர் கலாச்சாரம்  தொடர்பான நிகழ்வுகளை பதிவு செய்ய 1995 முதலே பல ஊடகங்கள் இயங்கி  வந்திருக்கின்றன. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கழகம், தமிழ் முழக்கம் 1992 , எஸ் பி எஸ்  சேவை , இன்பத்தமிழ், இப்படி பல வானொலி அமைப்புக்களும் இணைய வானொலிகளும் இயங்குகின்றன.

தமிழ் அவுஸ்திரேலியன், மெல்லினம், தென்றல், தமிழ் ஓசை ஆகியவை அச்சில் வரும் மாத இதழ்களாகும். காசு கொடுத்து  வாங்க  முன்வராத  படியால் இலவசமாகவே கிடைக்கிறது. தயாரிப்பு  செலவுக்கு தமிழ் வர்த்தகர்க விளம்பர ஆதரவாளர்களை நம்பியே அச்சு ஊடகம் செயல்பட வேண்டி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தமிழ் தொலைகாட்சிகளில் முதலில் வந்ததுசிகரம். 2007 இல்தரிசனம்இதனுடன் இணைந்து கொண்டது. பின் 2008 இல்குளோபல் தமிழ் விஷன்என்று புதிய அவதாரம் எடுத்தது. இவ்வூடகங்கள்தமிழர் கலாச்சாரம் சார்ந்த பல நிகழ்வுகளை நடத்துகின்றன. அச்சு ஊடகங்களைப் போல இல்லாது இளையோருக்கும் கவர்ச்சிகரமாக உள்ளது.
திரைப்படங்கள் வரவேற்பு பெற்றிருக்கின்றன. உள்ளூர் தயாரிப்புக்களும் உள்ளன.

தமிழ் அமைப்புக்களின்  முக்கிய நோக்கமாக தமிழ் கலை, கலாச்சார வடிவங்களினையும் கற்கவும், பேணவும் , செயல் வடிவம் கொடுப்பதும் உள்ளது.ஆனால் இப்படி கலை , பண்பாடு  மற்றும் கலாச்சாரம் பேணுதல் தொடர்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழினம் சந்திக்கும் நடை முறை சிக்கல்கள் பல.

தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு பேணுதலில் தமிழர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்
1.            நடைமுறைத் தமிழ் பயிற்றல்
2.            வாரம் ஒருமுறையே தமிழ், கலை பயிற்சிகள் நடப்பதனால் கால இடைவெளியும், அதிக நேரம் (4 மணித்தியாலம் ) நடப்பதனால் இளையோர் கட்டாயப்படுத்தப்படுவதாக ஓர் உணர்வை ஏற்படுத்தி அவர்கள் ஆர்வம் குறைகிறது.
3.            இளையோர் அன்றாட வாழ்வில் அதிக அளவில் ஆங்கிலப் பேச்சில் ஈடுபடுவதால் தமிழ் சார்ந்து கலைகளைக் கற்றலிலும், கற்பித்தலிலும் சிரமம் ஏற்படுகின்றது.
4.            மொழிப்புரிந்துணர்வு குறையும் போது பொருள் உணர்ந்து கற்றல், வெளிப்படுத்தல் சிக்கலாகிறது.
5.            பலருக்கு ஆர்வம் இல்லாமல் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவே பயிற்சிக்கு வருகின்றனர்.
6.            இரு/பல் கலாச்சார சம நிலைப் பேணலில் தனி நபர் சூழ்நிலை சார்ந்து, வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கத் தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வருதல்.
7.            பணி, வாழும் சூழ்நிலைகள் கலாச்சார பேணலுக்கு சாதகமாக இல்லாமை.
8.            இனவாதம் , இனம் சார்ந்த கொடுமைகளை சந்திக்கும் வேளையில் கலாச்சார அடையாளங்களைப் பேணமுடியாமை.
9.            தமிழ் கலை கலாச்சாரம் வளர்க்கபின்பற்றக்கூடிய சாதகமான பின் புலம் இல்லாத இடங்களில் இருத்தல்.
10.          இளையோர் தாமாகவே தமது கலாச்சாரம் விட்டு விலகிச் செல்லுதல்.
11.          வேறு கலாச்சார பின்னணி கொண்டோருடன் திருமணம் மற்றும்  உறவில் ஈடுபடுவதால் வேறு/ கலப்பு கலாச்சாரத்தை தழுவுதல்.
12.          தமிழை சரளமாகப் பேசுவதற்கும் ,வாசிப்பதற்கும் தடுமாறுவதால் அச்சு ஊடகம் இளையோரைக் கவர்வதில்லை
13.          வேறு கலாச்சாரம் சார்ந்த கலைகளில் ஈடுபாடு வளர்வது.
14.          புதிய கலாச்சாரம் சார்ந்து  இளையோரின் அணுகுமுறைகள் தமது கலாச்சார விழுமியங்களை நிராகரிப்பது.
15.          தமது கலாச்சாரம் தொடர்பான கட்டாயப்படுத்தலால் வரும் வெறுப்பு
16.          தமது கலாச்சாரம் தொடர்பான புரிந்துணர்வு இன்மை.
17.          தமது கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் ஆர்வம் குறைதல்அதிகமாகத் திணிக்கப்படுவதால் அல்லது அல்லது  அறிமுகமின்மை காரணமாக.
18.          பெற்றோர் கலாச்சார விழுமியங்களை பின்பற்றாத காரணம்
19.          தொலைகாட்சி கலாச்சார பரப்புதலுக்கு உதவியாக இருந்தாலும் , இளையோர் தமிழ் பேசுவதில் உள்ள தடுமாற்றம் தடையாக இருக்கிறது.இது வானொலிக்கும் பொருந்தும்.
20.          இளையோர் தமிழை சரளமாக படிக்க எழுத  முடியாத காரணத்தினால் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகும்.(படித்தல்- பங்களித்தல்)
21.          தமிழ் திரைப்படங்கள் , இப்போது வரவேற்பில் இருந்தாலும் அடுத்த தலைமுறையினரைக் கவர்வதில்லை.
22.          சமூக வலைத் தளங்கள் , இணைய தளங்கள் , வலைப்பூக்கள் மூலம் தமிழ் செயல்பாடுகள்தமிழில் தொடர்பாட எழுத்து மொழி அவசியம்.
23.          நூல்கள் வெளிட்யிடப்படுகின்றன. ஆனால் அடுத்த தலைமுறையினர் இலக்கு அல்ல.

பரிந்துரைகள்
1.            மொழியின் பயன்பாடு தொடர்பான சரியான புரிந்துணர்வை கற்பித்தலில் ஈடுபடுத்த வேண்டும்.
2.            தமிழில் பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
3.            எளிய, நடைமுறைத்தமிழ்பயன் பாட்டுத்தமிழ் தமிழ் கற்பித்தலில்  நோக்கமாக இருக்கவேண்டும்.தொன்மையை பாதுகாக்க தேவைதான். ஆனால், முதலில் அடிப்படையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
4.            கலாச்சாரம், மொழி தொடர்பாக  பெற்றோருக்கு  வேறுபட்ட கருத்துக்கள் இருந்தால் விலக்கி அவற்றின்  முக்கியத்துவத்தை உணர்ந்து இளையவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
5.            கடும் மொழியில் இல்லாமல் இலகு தமிழில் உள்ளடக்கம் உள்ள அச்சு, இணைய படைப்புக்கள் தேவை.
6.            இளையவர்களுக்கு ஆர்வமூட்டும் பொருளில்  ஊடக, இணைய படைப்புக்கள் தேவை.
7.            இளையோருக்கு ஆர்வமூட்டுவதாக தமிழ் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
8.            மொழி வித்தியாசம் குறைக்கப்படவேண்டும்இலங்கைஇந்திய தமிழ் வேறுபாடு.
9.            தமிழ் கல்வி நிலையங்கள்  கற்றுத் தருவதை வீட்டில் பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கித்தர மொழி வளம் செறிந்த இல்லங்கள் தேவை.
10.          தமிழ் நவீன தொழில் நுட்பங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
11.          இணையம் சார்ந்த பங்களிப்பில் இளையோர் உக்குவிக்கப்படவேண்டும். வயது சார்ந்த விடயங்கள் சேர்க்கப்படலாம்.அதற்கு நகைச்சுவை துணுக்குகள், சிறிய கவிதைகள் ஆரம்பமாக இருக்கலாம்.
12.          மொழி, கலாச்சாரத்தின்  தொன்மையை மட்டுமே பேசுவதைவிட்டு எதிர்காலத்தில் நடைமுறையில் அவற்றை பயன்படுத்தி பராமரிக்கத்தக்க வகையில் தமிழ் ஊட்டப்படவேண்டும்.
மேற்படி முயற்சிகள் தமிழையும் கலாச்சாரத்தையும் கற்றல், பயன்படுத்தல் , கற்பித்தல் மற்றும் பராமரித்தலுக்கு வழிவகுக்கும்.
கலாச்சாரமும் மொழியும் பிணைந்தே செயல்படுவதால் மொழி சார்ந்த தளத்திலேயே கலாச்சாரமும் பயணிக்கின்றது. பிறமொழி மற்றும் கலாச்சாரத்தைத் தாண்டி தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பேணுவது மிகச் சிக்கலான ஒன்றே. எளிய நடைமுறையுடன் ஒன்றிய மொழிப்பயிற்சியும், வாழ்வுடன் தொடர்புறும் கலாச்சார அனுபவமுமே புலம் பெயந்த நாடுகளில் தமிழர்களின் கலை , பண்பாடு  மற்றும் கலாச்சாரம்  பேணுவதில் எதிர் நோக்கும் நடை முறை சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

பின்குறிப்பு: இக்கட்டுரையில்சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஒரு தமிழ் கல்விக்கூட ஆசிரியர், இளைய தலைமுறையில் இருந்து தமிழ் வளர்க்க உதவிய ஒருவர், மற்றும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டவை.