Sunday, May 18, 2014


மூன்றாம் பாலி’னத்துக்கு இந்தியாவில் அங்கீகாரம்

’மூன்றாம் பால்’ என அங்கீகரித்து திரு நம்பிகளுக்கும்,  திரு நங்கைகளுக்கும் சமூகத்தின் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்  என இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு இந்தியாவை உலக அரங்கில் புதிய கோணத்தில்  பார்க்க வைத்திருக்கிறது.
இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கோரி, தேசிய சட்ட மையம் தொடுத்த பொதுநல மனு மீதான வழக்கில் வழங்கப்பட்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு. அத்துடன் திருநங்கைகளை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சகல உரிமைகள், சிறப்பு உரிமைகள் அனைத்தையும் வழங்குவதோடு மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது.எந்த ஒரு பாவமும் செய்யாமல் பிறப்பின் தவறால் பால் மாறும் மனிதர்கள் தங்கள் விருப்பப் படி வாழ்க்கையை வாழும் உரிமையை இந்தத் தீர்ப்பு பெற்று தந்திருக்கிறது.
திரு நங்கை அல்லது நம்பிகள் பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாத காரணமும், தம் குடும்பங்களில் இத்தகைய பால் மாற்றம் ஏற்படும் போது அதை சரியாக கையாளத் தெரியாத அறியாமையும்  இன்று ஆஸ்திரேலிய புலம் பெயர்ந்த குடும்பங்களில் நிலவுகின்றன.

மகாபாரதத்தில் சிகண்டி, இந்திரனின் சாபத்தால் பெண்ணாக மாறிய பாங்கக்ஷ்வன ராஜன் , எதிர்பாராமல் கர்ப்பமுற்று, பிள்ளைப் பெற்ற யுவனஷ்வ ராஜன் போன்றோரை  நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. விஷ்ணு  மோகினியாக  மாறி  சிவன் மேல் காதல் கொண்டதும்,பிருந்தாவனத்தில் சிவபெருமான் பால்காரியாகி கிருஷ்ணருடன் ராசலீலை ஆடியதும் ,ராதையின் மேல் காதலாகி  கிருஷ்ணர்  பெண் வேடம் அணிந்ததும் நமது புராணம் சொன்ன உண்மைகள்.  குஜராத்தில் கடவுளான பகுசர்ஜீயும் , தமிழகத்தில் கூத்தாண்டவரும் திருநங்கையர்களை ஆசீர்வதிக்கும் போது நாம் மட்டும் சபிப்பதேனோ?

No comments:

Post a Comment