Monday, October 28, 2013

கணினித் தமிழ் 

இக்கட்டுரை 2013 சிட்னி உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் சமர்பிக்கப்பட்டதாகும்.


இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கணினி வழித் தொடர்பு அனைத்துத் தடைகளையும் தகர்த்தது.

கணினி பெரிய அளவிலிருந்து சுருங்கி, மேசைக்கு எட்டியதும், அலுவலக பயன்பாடுகளைத் தாண்டி தனி நபர் பயனுக்கும் தாவியது,அல்டஸ் (Aldus) பக்க அமைப்பு மென்பொருளும்,  விண்டோஸ் 3.1 செயலியும் சங்கேத மொழியால் (coding) உள்ளீடு செய்யும் தேவையை குறைத்து எளிய ஆங்கிலத்தோடு கூடிய பார்வை சார்ந்த  உள்ளீட்டு முறையை அறிமுகப் படுத்தியது.



எழுத்துருக்கள்

இந்த மாற்றங்கள் தமிழ் அச்சுத்துறைக்கு பெரும் மாற்றத்தை அறிமுகப் படுத்தியது.அச்சகத்துறையும் பெரிய அச்சுக் கருவிகளை பயன்படுத்துவதை  விட்டு சிறிய  அச்சுத் தேவைகளுக்கு  மேசை அச்சகங்களை பயன் படுத்தத் தொடங்கின.பதிப்புத்துறை, அதைச் சார்ந்த மற்ற ஊடகங்களையும் மாற்றத் தொடங்கியது. விளம்பரம், தொலைகாட்சி, சினிமா போன்றவைகளும் கணினித் தமிழால் பயன் பெறத்தொடங்கின.



இலங்கையில் 1983 ஜுலைக் கலவரம் தமிழர்களுக்குத் தீங்காக அமைந்தாலும் கூட, உலகளாவிய ரீதியில் தமிழர்கள் பரந்து வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது என்றால் மிகை ஆகாது. தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது கலையும் கலாச்சாரமும். தொடர்பியல் கலைக்கும் கலாச்சாரத்துக்கு மிக இன்றியமையாதது.இதனால் தமிழர்களின் உலகளாவியத் தொடர்பியல் தேவை அதிகரித்தது. அதற்கு கணினி அத்தியாவசியமாயிற்று.





மேசைக் கணினி மடிக் கணினி ஆனது, பின் அலைபேசியின் அவதாரங்கள்இணையத்தின் வரவு,  தமிழ் சமூகத்தின் உலக அளவிலான விரிவாக்கல், தமிழில் வலை மனைகளின் அறிமுகம் எனக் கணினி சார்ந்த தமிழின் வளர்ச்சி வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டது.



இதனால் எழுத்துருக்கள் விதவிதமாக வரவேண்டிய தேவை உருவானது.1980 களில் முதலில் தோன்றிய மென்பொருள் ஆவணங்கள் எழுதும் ஆதமி (Adami) என்பதாகும்.கனடாவை சேர்ந்த  கலாநிதி ஸ்ரீநிவாசன் அவர்களுடைய முயற்சியால் இது உருவானது. டாஸ் (Dos)  இயங்கு தளத்தில் இது பயன் படுத்தப்பட்டது.தொடர்ந்து பெங்களூர்  வேர்ட் லோர்ட் நிற்வனம் 'டாஸ்' இயக்க 'வேர்ட்’(word) மென்பொருள்  மூலம் பாரதி என்ற தமிழ் மென்பொருள் தொகுப்பினைக் கொண்டு வந்தது.



அதன் வழித்தோன்றலாக ஸ்ரீநிவாசன் வடிவமைத்த (ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ) 'ஆதவிண் வந்தது.தொடர்ந்து பாரதி வந்தது.ஆப்பிள் கணினிகள் பிரபலமாகத்தொடங்கிய கால கட்டத்தில் அல்டஸ் பக்க அமைப்புக்கு ஏற்றபடி பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப் படுத்தினார். யூனிக்ஸில் தமிழுருக்கள் கலாநிதி  பால சுவாமிநாதன் மற்றும்  கலாநிதி ஞானசேகர் சகோதர்களால் அறிமுகப் படுத்தப் பட்டன. கனடாவில் கலாநிதி விஜயகுமார் ராகங்களின் பெயரில் பல எழுத்துருக்களை அறிமுகப்படுத்தினார். கலாநிதி குப்புசாமி அவர்கள் உருவாக்கிய  எழுத்துருக்களும், கலாநிதி கல்யாணசுந்தரம் உருவாக்கிய மயிலை மற்றும் பாமினி போன்றவையும் பரவலாக பன்படுத்தப்பட்டன.

தினமலர் ஆசிரியர்  இரா. கிருஷ்ணமூர்த்தி தன் சொந்த முயற்சியில், 'புனே மொடுலர்' நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார்.



தமிழ் பத்திரிகை நிறுவனங்கள் வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை பயன் படுத்தின.இதில் ஒரு சிக்கல் எழுந்தது. பாமினியில் எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை மற்றவர் அவரது கணினியில் பாமினி எழுத்துரு இருந்தால் மட்டுமே  படிக்க முடியும். பொதுவான ஒரு தர நிர்ணயம் எழுத்துருக்களை நெறிப்படுத்துவதற்காக இருக்கவில்லை. ஓர் ஆவணத்தை  தரவிறக்கம் செய்தால் எழுத்துருக்கள் வித்தியாசப் பட்டன.மின்னஞ்சல் அனுப்புவதில் இந்த வித்தியாசம் குழப்பங்களை உண்டு பண்ணியது. அனுப்புனர் , பெறுநர் இருவருமே ஓரே எழுத்துருவை தங்கள் கணினியில் வைத்திருக்காவிட்டால் மின்னஞ்சலைப் படிக்கமுடியாது.

1990 களில் இந்த சிக்கலை நீக்க மதுரை என்ற  மென்பொருளை கலாநிதி  பால சுவாமிநாதன் உருவாக்கி  ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துக்களின் உதவியால் உருவாக்கினார். AASCI முறையில் எந்த ஒரு எழுத்துருவையும் சாராமல் இந்த மென் பொருள் இயங்கியது சிறப்பாகும்.



மின்னஞ்சல்

மின்னஞ்சல் தொடர்பாடல் மிக முக்கியமாக கருதப்பட்ட கால கட்டத்தில் மலேசியா,சிங்கப்பூர் தமிழர்களின் முயற்சிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. திரு. முத்து நெடுமாறன், முரசு நிறுவனத்தினிலிருந்து முரசு அஞ்சலைக் கொண்டுவந்தார். இதில் எழுத்துரு, சொல் திருத்தி, மின்னஞ்சல் செயலி, விசைப்பலகை என்பனவும் வேறு சில சேவைகளும் உள்ளடக்கப்பட்டன. தட்டச்சு அறிவு இல்லாமலேயே எழுத்துப்பெயர்ப்பு மூலம் கணினியில் தமிழில் எழுதுவது இலகுவானது. தமிழை எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் கூட தமிழில்  தட்டச்சு செய்யும் வாய்ப்பை இது உருவாக்கியது.

ஒற்றைக் குறியீட்டு அமைப்பு (Unicode)

மொழி ஆர்வலர்களும், கணினித்துறை விற்பன்னர்களும், சர்வதேசக் கணினி நிறுவனங்களூம் பல மொழி புழங்கும் நாடுகளைச் சேர்ந்த  பல்கலைக் கழகங்களும் இணைந்து ஒற்றைக் குறியீட்டு - Unicode consortium ( http://www.unicode.org/) என்பதனை உருவாக்கினர். ஒற்றைக் குறியீட்டு அமைப்பு பொதுவான ஒரு தர நிர்ணயம் ஒன்றை அறிமுகப்படுத்தி உலக மொழிகள் அனைத்தையும் தரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது.அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்துவதனால் உலக அளவில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதை ஏற்றுக் கொள்ளும் முகமாகத் தமிழக அரசு நடத்திய தமிழ்நெட்99 ஆய்வு மாநாட்டில் ஒற்றைக் குறியீட்டுமுறை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.



தமிழ் கணினித்துறைக்கு பங்காற்றியுள்ளவர்கள்

தமிழ் கணினித்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளவர்களில் கலாநிதி   வா.செ. குழந்தைசாமி, கலாநிதி மு. ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள் நா. கோவிந்தசாமி, வி. கிருஷ்ணமூர்த்தி, பொன்னவைக்கோ, நா. தெய்வசுந்தரம், குப்புசாமி, மொழியியலாளர் எம். கணேசன் மற்றும் மென் பொருள் தயாரிப்பாளர்களான முத்தெழிலன், கல்யாணசுந்தரம், அன்பரசன், இளங்கோவன், செல்லப்பன், மனோஜ் அண்ணாத்துரை, ஆண்டோ பீட்டர் ,மற்றும் தமிழரல்லாதவர்களில் பேராசிரியர் ஹெரால்ட் ஷிப்மேன், சீன கணிப்பொறியாளர் ஜேம்ஸ் செங் ஆகியோரும்  அடங்குவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  பாலா பிள்ளை 'தமிழ் நெட்' என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழ் வளர்க்கும்  முயற்சிகளுக்கான முன்னோடியாக இருக்கிறார்.

தமிழ் இணைய மாநாடுகள்

தமிழில் கணினிதொடர்பாக மொழி ஆர்வலர்களும் கணினித்துறை விற்பன்னர்களும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளமை போற்றுதற்குரிய ஒரு விடயமாகும்.இதற்காக நடத்தப்பட்ட மாநாடுகளில் முக்கியமானவை:-

·        1994 இல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த தமிழும் கணிப்பொறியும்கருத்தரங்கு.

·        1997 மே மாதம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினி மற்றும் இணைய மாநாடு தமிழ் நெட் 97 கணியன்மென்பொருள் புகழ் நா. கோவிந்தசாமியின் முயற்சியில் நடத்தப்பட்டது. இம்மாநாடு கணித்தமிழ் வளர்ச்சியிலும் , தமிழ் வரலாற்றிலும் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியது.

·        1999 இல் சென்னையில் தமிழ்நெட்99 இணையம் தொடர்பான  சர்வதேச மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.

இவை தவிர இதுவரை 12 தமிழ் இணைய மாநாடுகள் நடந்திருக்கின்றன. 13வது தமிழ் இணைய மாநாடு இந்த ஆண்டு மலேசியாவில் நடக்கிறது.



இணையம்

முதல் தமிழ் வலைப்பக்கத்தை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி 1995 இல் வடிவமைத்தார். இணையம் வளர்ந்ததோடு, தமிழ் செயலிகள், நாளிதழ்கள், நூல்கள், சஞ்சிகைகளின் மின் பதிப்புகள், வானொலிகள், மொழி வளர்க்கும் கருவிகள், தொலைகாட்சிகள், சமூக மற்றும் தனி நபர் வலைமனைகள், தேடு பொறிகள், அகராதிகள்,பதிவுகள், முகநூலில் தமிழ் போன்ற உபரி அம்சங்களும் வளர்ச்சியடைந்தன.உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான 'கூகுள்', தேடு கருவியில்  தமிழிலே தட்டச்சிட வசதி வந்துள்ளது. இணையத்தில் தமிழ் பக்கங்களை தேடுவதற்கும், ஜிமெயிலில் தொடர்பு கொள்வதற்கும் இது பயன் தருகிறது. இன்னொரு தேடல் இயந்திர இணையத்தளமான 'யாஹூ' வும் தமிழைத் தங்கள் வலைமனைக்களில்  பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றன



அலைபேசிகள்

மடியில் இருந்த கணினி கைக்குத் தாவியது. கணினியின் அம்சங்களுடன் கூடிய அலைபேசிகள் அதை சார்ந்து வந்த குளிகைக் கணினிகள் இணையம் தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் ஈடு கொடுக்கத் தொடங்கின. இதற்கேற்றவாரு தமிழும் தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டி இருந்தது. ஃபோன்,  பேட் , அன்ரொய்ட் வருகையால்,அவற்றின் இயங்குதளங்களுக்கு ஏற்றபடி செயலிகளையும் தேடுபொறி, பக்கங்கள், எழுத்துருக்கள் இன்ன பிறவும் தமிழில் அமைய வேண்டியதாயிற்று.இதனால்தொழில் நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக தமிழ் வளர்ச்சியும் இணையத்துடன் இணைந்து கொண்டது.



இணையத் தமிழ் தகவல் தொடர்பில் தனி நபர்களுக்கிடையே மட்டும் நடக்கும் மின் அஞ்சல், அரட்டை போன்ற தனி நபர் நிலைப்பட்ட தொடர்புகள், அடுத்து, மின்னஞ்சல் குழுக்கள், செய்திக் குழுக்கள் போன்ற குழு நிலைப்பட்ட தொடர்புகள் மற்றும்  பரவலாகத் தகவல் பெறுநர்களுக்காக நடத்தும் வலைமனைக்கள் , மின் அஞ்சல், மின் இதழ்கள் போன்ற வெகு சன ஊடகங்கள் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிப்பதனால் இணையத் தமிழ் நின்று நிலைக்கும் என்பது உறுதியாகும்.



ஆனாலும் தமிழ் ஆசிரியர்களும், தமிழ் அறிஞர்களும் தமிழில் முழுத்தொடர்பாடலையும் செய்யும் சூழ்நிலையில் இருப்பவர்களும் இன்னும் தமிழில் தட்டச்சுக்கு கணினியைப் பயன் படுத்தாதது கவலைக்குரியதாகிறது.இந்தக் குறைநிவர்த்தி செய்யப் பட வேண்டும்.ஏனென்றால் எதிர் காலத்தில் அச்சில் வரும் ஆவணங்கள்  கணினி சார்ந்த மின்னியல் ஆவணங்களினால் பிரதீயீடு செய்யப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



சில பரிந்துரைகள்:

·        தமிழர்கள் அனைவரும் தமிழில் எழுதவதற்குக் கணினியை பயன் படுத்தவேண்டும்.



·        தமிழ் சார்ந்து பணி புரிபவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள்,தமிழறிஞர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் தமிழில் எழுதவதற்குக் கணினியை பயன் படுத்தவேண்டும்.



·        உயர் கல்வியில் தமிழ் படிப்பவர்களுக்கு கணினி ஒரு கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.



·        கணினியை பயன் படுத்தி தமிழில் எழுதவதற்கு தகுந்த பயிற்சி அளிக்க முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.