Sunday, October 26, 2014

அன்னமாச்சார்யா

என்றும் வாழும் அன்னமாச்சார்யா
கலைமகள் தீபாவளி மலர்



திருப்பதியை நினைப்போருக்கு தாபாக்க அன்னமாச்சார்யாவும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருவார். அத்தனை ஈடுபாட்டுடன் திருவேங்கடவன் திருவருளை போற்றிப் பாடல்களை எழுதியவர் அன்னமாச்சார்யா. தெலுங்கு , சமஸ்கிருதம் இரண்டு மொழியிலும் இவர் பல கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். எம் எஸ் அம்மாவின் தேன் குரலிலும் , பிரியா சகோதரிகளின் இசையிலும் இன்றும் நம்மைக் கட்டிப் போட்டு வைத்திருப்பவை இந்தப் பாடல்கள்.அன்னமாச்சார்யா திருவேங்கடவனின் திரு வாளின் அவதாரம் எனப்படுவார். இவருக்கு 16 வயதாயிருக்கும் போது பெருமாள் நேரில் காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பது வரலாறு.
தாபாக்க அன்னமாச்சார்யா ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தாபாக்க கிராமத்தில்  1424 இல் சர்வதாரி ஆண்டு வைகாசி பௌர்ணமி அன்று பிறந்தார்.தொண்ணுற்று ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து 1503 இல் மறைந்தார்.
ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் மீதும் அலர்மேல் மங்கை மீதும் மொத்தம் சுமார் முப்பத்து இரண்டாயிரம் ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். முப்பத்து இரண்டாயிரம் பாடல்களும் முப்பத்து இரண்டாயிரம் மந்திரங்கள் என நம்பப் படுகிறது.
1922 ஆம் ஆண்டு வரை இவரது பாடல்கள் எதுவும் கிட்டவில்லை. காரணம் இவரது பாடல்கள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டும் செப்புத் தகட்டில் பதிவும் செய்யப்பட்டிருந்தன. இத்தகடுகள் பலகாலம் ஒளித்து  வைக்கப் பட்டு  1922 இல் தான் கண்டுபிடிக்கப் பட்டன. பதினான்காயிரம் பாடல்களா கொண்ட 25 ஆயிரம் செப்பேடுகள் திருவேங்கடவன்  கோவில் உண்டியலுக்கு எதிரில் கண்டு பிடிக்கப்பட்டன. அங்கு உள்ள ஒரு ரகசிய  அறையில் இந்த ஓலைச்சுவடிகளூம் , பின்னாளில் அவை எழுதப்பட்ட செப்பேடுகளும் 400 ஆண்டுகளூக்கு மேலாக மறைந்தே கிடந்துள்ளன.

திருப்பதி தேவஸ்த்தானம் பன்னிரண்டு ஆயிரம் பாடல்களைக்கண்டு பிடித்து பதிப்பித்தது. இவரது மனைவியும் புலமைத்துவம் பெற்றவர்.இவரது மனைவி திம்மக்கா சுபத்ரா கல்யாணம் என்ற பாடல் தொகுப்பை எழுதி தெலுங்கில் எழுதிய முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
அவரது பாடல்கள் அத்யார்தம மற்றும் சிருங்கார ரச வகைப்பாடல்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.அத்யார்த்தம ங்கீர்த்தனை என்பது தெய்வீகத்தின் மேம்பட்ட நிலையை பாடுவததாகும்.  இறைவனை நாடும் உயிர் இறைவனைச் சேர படும் பாடு, அதன் தொடர்பாக சந்திக்கும் சோதனைகள், எதிர்கொள்ளும் போராட்டங்கள்,லௌகீக , ஆன்மீக இருமுனைப் போராட்டத்தின் நடுவில் ஆன்மா படும் அவஸ்தைகள் ஆகியவற்றை வெளிக்காட்டி  பாடப்படும்  பாடல்கள். அன்னமாச்சார்யர் தான் இறைவனை அடைவதற்காக முயலும் போது அனுபவித்த வேதனகளையும் , சோதனைகளையும் உணர்வு பூர்வமாக தன் பாடல்களில் வெளிப்படுத்துடுகிறார்.
சிருங்கார ங்கீர்த்தனை என்பது பெருமாளை ஆத்மா தேடும் தேடல், நாயக நாயக பாவனையில் காட்டப்படும் அன்பு, இறுதியில் பெருமாளிடம் முழு சரணாகதி  போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
அன்னமாச்சார்யாவின் சங்கீதம் அனைத்தும் ஒரே வகையானக் கட்டமைப்பைக் கொண்டன.ஒவ்வொரு பாடலும் பல்லவி, நான்கு வரிகளைக் கொண்ட மூன்று சரணக் கோர்வைகள், அனேகமாக அனுபல்லவி இல்லாமல் அமைந்திருக்கும் .மிக உயர்ந்த இலக்கிய நயத்துடன் அமைந்திருந்தாலும் கூட பழகுத் தெலுங்கும் ஆங்காங்கே தலைக் காட்டத்தவறுவதில்லை.. நிறைய தமிழ் சார்புடைய தெலுங்கு சொற்களை கொண்டன. கேட்போருக்கு இலகுவில்  புரியும். அன்னமாச்சர்யாவிற்கு  பத கவிதை பிதா மஹர் என்ற பட்டமும் உள்ளது.
அன்னம்ய்யாவின் மூதாதையரில் மூன்று தலைமுறைக்கு முந்திய  நாராயணய்யா படிப்பில் மிக குறைந்த நிஅலலியில் இருந்த போது, அந்த்ககால வழக்கப்படி மிக கடினமானத் தண்டனை, அவமானம் என்று சித்திரவதைகள் இருக்கும். அவற்றில் இருந்து தப்பிக்க மரணமே முடிவென்று நாராயணய்யா அவரது கிராமமான சிந்தாலம்மா கோவில் பாம்பு புற்றுக்குள் கையை விட்டு இறக்க முற்பட்டார். அப்போது கிராமத்து அம்மன் தோன்றி தடுத்து ’உனது பரம்பரையில் மூன்றாவது தலை முறையில் ஹரியின் அம்சத்துடன் தோன்றுவான் . எனவே நீ  வாழ வேண்டும் ‘ என ஆணையிட்டதாக அன்னமைய்யா சரிதம் கூறுகிறது.
அப்படி மூன்றாவது தலை முறையில் பிறந்த சிறுவன் அன்னமய்யா ஒரு நாள் புல் வெட்ட சென்றபோது அங்கு திருப்பதிக்கு சென்று கொண்டு இருந்த ஒரு கூட்டத்தினரைச் சந்தித்தான்.அவனை அறியாமலேயே அவன் அவர்களுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.அவர்கள் வெங்கடேசப் பெருமாளின் மகிமையைப் பாடி கொண்டு நடந்தனர்.இவனும் அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது காலில் இருந்த செருப்புடன் மலை ஏறத் தொடங்கினான்.மலை மேல் செருப்புடன் செல்வது கூடாது என்று தெரியாமலேயே நடந்தான்.அப்போது ஒரு மூதாட்டி  தோன்றி செருப்பைக் கழற்றி விட்டு செல்லும் படி கூறினாள்.அம்மூதாட்டி வேறு யாரும் இல்லை.அலமேலு மங்கைத் தாயார் தான்.அலமேலு மங்கை அன்னமய்யாவுக்கு பெருமாளின் திவ்யப் பிரசாதத்தையும் அளித்தார்.அதன் பின் அம்மை மறைந்தார்.அந்தக் கணத்தில் தனது முதல் சதகத்தைப் பாடினார் அன்னமய்யா.தனது தெய்வத்தை காண பக்தன் ஏங்கும் விதமாக அப் பாடல் அமைந்தது.
பின் திருமலைக்கு சென்று திவ்யதரிசனம் பெற்றார்.பல காலம் திருமலையில் தங்கி பல பாடல்களைப் பாடினார்.பின் சொந்த ஊரான கடப்பா , தாபாக்கம் சென்று திருமணம் செய்து இல்வாழ்க்கையில் ஈடு பட்டார்.திம்மக்கா, அக்காலம்மா ஆகிய இருவரை மணந்தார்.

இல்லறத்தில் ஈடு பட்டிருந்த காலத்தில் சிருங்கார ரசம் மிகுந்த பல பாடல்களை  பெருமாளையும் தன்னையும்  நாயக நாயகி பாவனையில் அமர்த்திப் பாடியிருக்கிறார்.சாதி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மிக சில தெய்வீக மார்க்கத்தில்  ஈடு பாடு கொண்டவர்களில் அன்னமய்யாவும் ஒருவர். இவரது படைப்புக்களில் நூறு பாடல்கள் கொண்ட சதகங்களும் அடங்கும்.சிருங்கார மஞ்சரி, வெங்கடேச மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம்  ஆகியவை குறிப்பிடத்தக்கன.இவரது ராமாயணம் (துவிபாதா) இரட்டை வரிகளில் (திருக்குறள் போல) எழுதப்பட்டுள்ளதாகும்.

No comments:

Post a Comment