Sunday, March 2, 2014

பூலோக வைகுண்டம் அரங்கன் துயிலும் ஸ்ரீரங்கம் - தமிழ் அவுஸ்திரேலியன்

பூலோக வைகுண்டம் அரங்கன் துயிலும் ஸ்ரீரங்கம்
சந்திரிகா
பெருமாள் தனது அற்புத தரிசனம் தரும் நூற்றெட்டு திருத்தலங்களில்   நின்றும் இருண்டும் கிடந்தும் காட்சி தருகிறார்.  கிடந்த திருக்கோலத்தில் காட்சி தரும் முப்பது திருத்தலங்களில்

மட்டுமே திருமால்  சயன நாதனாகக் காட்சி அளிக்கிறான். அனந்த சயனம் , புஜங்க  சயனம், யோக சயனம், தல் சயனம் பல சயனங்கள் இவையாகும்.
இவற்றில்  பூலோக வைகுண்டம் எனப் பெருமை கொண்டது திருவரங்கன் திருத்தலமாகும்.
                'நீலமேகம் நெடும் பொற்குன்றத்துப்
                பால் விரிந்தகலாது படிந்தது போல
                ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
                பாயற்பள்ளி பலர் தொழுதேத்த
                விரிதிரைக் காவிரி வியன் பெருந் துருத்தித்
                திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்'
என்று சிலப்பதிகாரக் காடுகாண் காதை குறிப்பிடும் வண்ணம் கீர்த்தி பெற்ற மூர்த்தி  திருவரங்கன்.

பிரமன் கொடுத்ததும் விபீஷணன் பெற்றதும்
                பிரமன் தன்னுடைய கடுந்தவப் பலனாக பெற்ற திருவரங்க விமானத்தை ஆரிய குல மன்னனான இஷ்வாகுவிடம் அளித்தான். அயோத்தி மன்னர்களின் 'குலதன'மாகக் கருதப்பட்டு வந்த இது இராமர் காலத்தில் லங்கர் தகனத்தின் பின் நட்பின் சின்னமாக விபீஷணனுக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் சந்தியா கால பூஜையை செய்யும் பொருட்டு அரங்கன் கருவறையும் விமானமும் கொண்ட பொற் தகடால் ஆன விமானத்தை கீழே வைத்து வழிபாடு செய்தான். மீண்டும் அதை எடுக்க முற்பட்ட போது அசையாது நின்றது விமானம். அரங்கன் தான் அங்கிருந்தவாறே தென்திசை தரிசனம் தருவதாக திருவாய் மலர்ந்தருளினான்.
இதனை,
                'அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்த
                கோயில் தோலாததனி தனி வீரன் தொழுத கோயில்
                துணையான வீடணற்குத் துணையாம் கோயில்என்று ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் கூறுகிறது.
                கங்கையும், காவிரியும் நம்மில் யார் பெரியவர் என்று போரிடத் தொடங்கினர். திருமாலிடம் முறையிட்ட இவர்களில் கங்கை இறைவன் திருவடிகளைத் தொட்டு தன் உற்பத்தியை உறுதிப்படுத்த பெருமாள் க்கையின் சார்பாக தீர்ப்பு வழங்கினார். தோல்வியுற்ற காவிரி தானும் சிறப்புப் பெற வேண்டுமென்று நினைத்து கடும் தவம் புரிந்த போது திருமால் தான் சயனித்த திருக்கோலத்தில் திருவரங்கத்தில் அமரும் போது காவிரி மாலையாகச் சுற்றும் பேறு பெறுவாள் என்ற வரத்தை அருளினார்.
                வைணவத் தலங்கள்  நூற்றி எட்டினுள் 'கோயில்' என்ற சிறப்புச் சொல்லுக்குரியதாக இருப்பது திருவரங்கம். 'ஸ்வயம் வியக்தம்' எனும்வாறு தான் தோன்றியதாக எம்பெருமாள் எழுந்தருளி இருப்பது எட்டுத் தலங்கள்.
திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீ முஷ்ணம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாசிரமம், சாளக்கிராமம் இவற்றுள் தென் திசையிலிருப்பது திருவரங்கம். காவிரியும் அதன் பிரிவான கொள்ளிடமும் மாலையிட்டு பெருமாள் தாள் பணிகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் எனப் போற்றப்படுவதும் இத்தலமாகும்.
காலம்
                சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டதென இதன் காலம் கருதப்படுகிறது. சங்க காலத்திலும் இதன் சிறப்பு அகநானூறு வாயிலாக அறியக் கிடக்கிறது. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரமும் இக்கோயில் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.
                சோழ மன்னன் கிள்ளி இத் திருக்கோயிலை அமைத்ததாக கோயில் ஒழுகு கூறுகிறது. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்த ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவரும் அரங்கனைப் பாடியுள்ளனர்.
அனைத்தும் பெரியன
                இத்திருக்கோயில் உறை இறைவனை பெரிய பெருமாள் என்றும் தாயாரை பெரிய பிராட்டியர் என்றும், ஊரைப் பேரரங்கம் என்றும், உணவை பெரிய அவசரம் என்றும் வாத்தியம் பெரியமேளம் என்றும், பட்சணம் பெரிய பணியாரம் எனவும் கோயில் பெரிய கோயில் எனவும் அனைத்துமே பெரியதாக அழைக்கப்படுகின்றன.
அரங்கன் பெரிய பெருமாளானது
                அரவணைப் பள்ளியில் துயில் கொண்டுள்ள அரங்கன் ஸ்ரீரங்கநாதன், அழகிய மணவாளன், அழகிய நம்பி என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். இராமன் வழிபட்ட காரணத்தால் 'பெரிய பெருமாள்' என்றும் வணங்கப் பெறுகிறான்.
கோயில் பரப்பு
                சுமார் ஆறு மைல் மொத்த நீளமுள்ள மதில்களால் இக்கோயிலின் பரப்பு 156 ஏக்கர். ஏழு பிரகாரங்களையும் ஏழு மதில் சுற்றுக்களையும் கொண்டது. கருவறையைச் சுற்றியுள்ள இடத்துக்கு திருவிண்ணாழி என்று பெயர்.
                'மாடமாளிகை சூழ் தரு வீதியும்
                மன்னுசேர் திருவிக்கிரமன் வீதியும்
                ஆடல் மாறன் அகளங்கன் வீதியும்
                ஆவிநாடான் அமைந்துறை வீதியும்
                கூடல்வாழ் குலசேகரன் வீதியும் -
                குலவிராச மகேந்திரன் வீதியும்
                தேடரிய தர்மவர்மாவின் வீதியும் -
                தென்னரங்கன் திரு வாரணமே'
என்று இங்குள்ள பிரகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஏழு உலகங்களையும் குறிக்கின்றதாகக் கருதுகின்றனர். இங்குள்ள விமானம் பிரணவ மந்திரமாகவும், நமோ நாராயணாய என்ற ஏழு எழுத்துக்கள் ஏழு மதில்களாகவும் உள்ளன எனப்படுகின்றன. சப்த பிரகாரங்களின் மொத்த நீளம் சுமார் ஆறு மைல்.

மண்டபங்களும் சன்னதிகளும்
                இங்குள்ள மண்டபங்களும், சன்னதிகளும் தனித்துவம் வாய்ந்தவை. திருவந்திக்காப்பு மண்டபம், அரங்க விலாசம், வசந்த மண்டபம், இராமாயணம் அரங்கேறிய கம்பர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், காயத்திரி மண்டபம் போன்றவை சிறப்பானவை. சன்னதிகளில் இராமானுஜர் சன்னதி, உற்சவ ஆண்டாள், அமிர்தகலசக் கருடர், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் சன்னதிகள், துலுக்க நாச்சியார் சன்னதி ஆகியவை விசேடமானவை.

திருவிண்ணாழி
                திருவிண்ணாழியைச் சுற்றியுள்ள முப்புறச் சுவர்களில் சுமார் நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூற்றெட்டு பெருமாள் தலங்களும் வண்ண ஓவியங்களாக வரவேற்கின்றன.

ஆசியாவிலேயே பெரிய கோபுரம்  இங்குள்ள இராஜகோபுரம்
                அரங்கநாதன் தென்புறம் நோக்கியிருப்பதனால் கோயிலின் தலைவாசல் தெற்குப்புறம் அமைந்துள்ளது. அங்கு தெற்கு கோபுரத்தின் அடித்தளம் மட்டுமே இருந்தது.
இக்கருங்கல் கட்டிடப்பகுதியின் நீளம் 165 அடி அகலம் நூறு அடி இராஜ கோபுரத்தை கட்ட முயற்சி செய்த அச்சுதராயர் மன்னர் முடிக்காததை மகான் முடித்தார் என்று சொல்லும்படியாக அகோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் நெடுநாள் காத்திருந்த கோபுரத்தை முடித்து வைத்துள்ளார்.
பதின்மூன்று நிலைகளையும், இருநூற்றி முப்பத்தாறு அடி உயரமும் கொண்ட இக்கோபுரம் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் நானூறு ஆண்டு காலம் மொட்டைக் கோபுரமாக நின்றதை செப்பனிட்டு 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லி ஸ்ரீ ரங்கநாத பக்தர்கள் இன்று ராஜகோபுர தரிசனம் பெறக்கூடியதாக உள்ளது. இதற்கு ஒன்றரைக் கோடி ரூபாயும் எட்டு ஆண்டுகளும் செலவாகியுள்ளன. தவிர மூலவ‌ரி‌ன் ‌விமான‌ம் த‌ங்க‌க் கோபுர‌ம் ஆகு‌ம்.

தைலக்காப்பு
                கருவறையின் பதினைந்து அடி நீளம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கன்னங்கரிய  வடிவினனான  ரங்கநாதப் பெருமாள் தைலக்காப்புக்குள்  உறங்குகிறார்.ஏன் என்றால் சுதையாலான சிலை என்ற படியால் அபிஷேகம் நடப்பதில்லை.

உற்சவங்கள்
                இங்கு நடைபெறும் உற்சவங்களில் பங்குனிப் பெருவிழா பிரமோத்சவமாகும். அதில் ஆறாம் நாள் உறையூர் வரும்  அரங்கன் சோழன் குலவல்லியான  நாச்சியாரை மணக்கிறார். ஒன்பதாம் நாள்  பெரிய பிராட்டியின் திரு நட்சத்திரமான பங்குனி உத்திர நன்னாள். அன்று அரங்கம்  திரும்பி  ஊடல் கொண்ட பிராட்டியை சந்திக்கிறார். நம்மாழ்வார்  தூது  சென்று  ஊடல் தீர்க்கிறார்.

இங்கு  நடைபெறும் பிற உற்சவங்களில்  வைகுண்ட ஏகாதசி மிகப் பிரசித்தி பெற்றது.சொர்க்க வாசல் என்ற விசேஷ வாசல் படி அன்று தான் திறக்கப் படுகிறது.அன்று பெருமாள் ரத்ன அங்கியில் காணப்படுகிறார்.அன்று 21, 800 முத்துக்கள் உள்ள முத்தங்கியும் அணிவிக்கப் படும்.

விஸ்வ ரூப தரிசனம்
அதிகாலையில் பக்தர்களுக்கு பெருமாள் அளிக்கும் முதல் தரிசனம் விஸ்வ ரூப தரிசனம்.திருக்கதவின் முன் நின்று சுப்ரபாதம்,பின் வீணாகானம், அத்னி பின் பசு, யானை, கண்ணாடி என அட்ட மங்கலங்கள், காட்டி மாதவன் கண்விழிப்பதாக ஐதீகம்.அத்ன பின் மீண்டும் திரையிடப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப் படும்.பின் பெருமான் திருமுகம் கழுவி, புத்தாடை அணிந்து அதன் பின் விஸ்வ ரூப தரிசனம் வழங்குவார்.

கருவரைக்குள் திருவரங்கன் திருமார்பில் லக்ஷ்மி மட்டுமே உறைகிறாள். ரங்கநாயகி தாயார், கமலவல்லித் தாயார், துலுக்க நாச்சியார் என்று அரங்கனுக்கு பல தேவியர் இருந்தாலும் அவர்கள் தனித்தனிச் சன்னிதிகளுக்குள் இருக்கிறார்கள்.

க‌ம்ப‌ர், ராமானுஜ‌ர்

க‌ம்ப‌ர் ராமாயண‌த்தை அர‌ங்கே‌ற்‌றிய ம‌ண்டப‌ம் இ‌‌த்தல‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ராமானுஜ‌ர் சுமா‌ர் 700 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு, இ‌ந்த கோ‌யிலு‌க்கு வ‌ந்து பூஜை முறைகளை ஒழு‌ங்குபடு‌த்‌தி அமை‌த்து, இ‌ங்கேயே இரு‌ந்து‌ள்ளா‌ர். கோ‌யி‌ல் வளாக‌த்‌தி‌ல் தா‌ன் அவ‌ர் சமா‌தி அடை‌ந்து‌ள்ளா‌‌ர்.

பன்னிரு ஆழ்வார்
பன்னிரு ஆழ்வார்களில், பதினோரு ஆழ்வார்களால் பாடப் பெற்ற ஸ்தலம் ஸ்ரீரங்கம் “. மதுரகவி ஆழ்வார் மட்டும் அரங்கனைப் பாடவில்லை.

’குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டுஉடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே’ என்ற தொண்டரடிப் பொடி ஆழ்வார் வாக்கில் உருகி அரங்கனை  வணங்குவோம்.

நருத்தீவில் அகதிகள்

 நருத்தீவில் அகதிகள்
அகதிகள்
 ஆஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் படும் துன்பம்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
வழக்கறிஞர் மற்றும் பாரிஸ்டர் உச்ச நீதிமன்றம் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா உலக அகதி வாரம் கொண்டாடத்  தயாராகிக் கொண்டு இருக்கும் வேளையில் ஆஸ்திரேலியா அகதி வருகையை சரியாக கையாளுகின்றதா என்பதே கேள்விக் குறியாகி உள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதி மாநாட்டு ஒப்பந்தத்தின்  கையொப்பதாரியாக  ஒரு பொம்மை போல தன் கடமையை செய்ய தவறவில்லை என்பது போல மாயை ஆக ஒரு செயல்பாட்டு நடவடிக்கையே இங்கு நடக்கும் அகதி நிர்ணய செயல்பாடு என்று தோன்றுகிறது.

அகதிகளாக , குறிப்பாக படகுகளில் வரும் மக்கள் மீது பெரும் வெறுப்பை அள்ளி வீசுகிறார்கள் இங்குள்ள மக்கள் என்பதே உண்மையாகும்.அகதிகளுக்கெதிரான பல நடவடிக்கைகள் மறைமுகமாக  தோன்றியுள்ளன எனபதே உண்மை.குறிப்பாக குற்றம்  சார்ந்த வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் அகதி விண்ணப்ப தாரிகளுக்கு  குற்றவாளி என்ற காரணத்தினால் அகதி விசா வழங்கப் படுவது மறுக்கப் பட்டு விடுகிறது.இது தவிர இலங்கை அகதிகளுக்கு குற்றப் பட்டியல் விபரம் கொழும்பில் இருந்து அவர் குற்றங்களுக்கு உட்படாதவர் என்று வர வேண்டும்.இது சாத்தியமா என்று சொல்லக் கூடியவர் எவரும் இல்லை. இந்த விபரம் வந்து சேராத படியால் அகதி அங்கீகாரம் நிர்ணயிக்கப் படாமல் ஒரு தொகை விண்ணப்பதாரிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாத அகதி வருகை 22,500 ஐ எட்டியதைத் தொடர்ந்து. இந்த ஆண்டு  ஜூன் 30க்குள் 25000 அகதிகள் வருவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ஆஸ்திரேலிய அரசு 3.2 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது. அகதிகளுக்காக செலவழிப்பதை குறைப்பதற்காக 2012 ஆகஸ்ட் 13 இன்  சலுகை மறுப்பு  கொள்கை அமுலாக்கப்பட்டது. அதன் கீழ் புதிதாக 2012 ஆகஸ்ட் 13 இன்  பின் வரும் அகதிகள்  ஆஸ்திரேலியாவிற்கு வெளியே அகதி நிர்ணயம்  தீர்மானிக்கப் பட்டபின், அவர்களுக்கு குடும்பத்தை இணைத்து கொள்ளும் சலுகை மறுக்கப் பட்டுவருகிறது.ஆனாலும் இந்தக் கொள்கை அமுலாக்கப் பட்டபின்னரும் கூட  19,760 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை  அரசு நினைத்ததை விட அதிகமாகும்.
இப்படி அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலியா தன்  பொறுப்பைத் தட்டி கழிப்பது சரியா? ‘இல்லைஎன்கின்றனர் அகதி நலக் குழுக்களும், அமைப்புகளும் சார்ந்த சமூக சேவையாளர்கள். ஆம்என்கின்றது ஆஸ்திரேலிய அரசு. இதற்கு அகதி உதவி நிலையங்கள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இவற்றைத் தாண்டி இலங்கையர்கள் படகுகளில் வந்து இறங்கிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு  அகதி அந்தஸ்து கிடைப்பதை தடுக்கும் முகமாக    ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள அகதி நிர்ணய நிலையங்களிடம் புற அகதி நிர்ணயப் பணியை ஒப்படைத்து வருகின்றது. ஆஸ்திரேலியா இதுவரை 2.3 பில்லியன் டாலர்களை இதற்காக  செலவிட்டு ,மேலும் 3.7 பில்லியன்களை செலவிடவும் தயாராக இருக்கின்றது.
புனை கதை
புற அகதி நிர்ணயம் அகதி வரவைக் கட்டுப்படுத்தும்
நிதர்சனம்
·         அகதிகள் சொந்த மண்ணில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் உருவாகின்றனர்.
·         ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை செயலர்(2005-2012) அன்ரூ மெட்காஃப்
·         ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள அகதி நிர்ணயம் செய்வதனால் , அகதிகள் வருகை குறைந்துவிட்டதாக சொல்ல்முடியாது.நரு தீவுக்கு அனுப்பப்பட்டவர்களில் பலர் ஆஸ்த்திரேலியாவில் அல்லது நியூசிலாந்தில் வதிவிட உரிமை வழங்கப்பட்டிருக்கிறர்கள். 
·         2012 ஆகஸ்ட் 13 இன்  சலுகை மறுப்பு  கொள்கை அமுலாக்கப்பட்ட பின்னரும் அகதிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.
·         அகதி என்றான பின்  ஐ நா அகதி மானாட்டு ஒப்பந்தத்தின் கீழ் அவர்களுக்கு ஆஸ்த்திரேலியாவின் சர்வதேச சட்டக் கடமைகள் எப்பொதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.அதன் கீழ் அகதிகளை  குடியேற்ற வசதி செய்வது தவிர்க்க முடியாது.
·         2006 இல் 41 ஆஃப்கானிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்களில் 29 பேர்  தள்ளப் பட்டு இருக்கிறார்கள்.

 புனை கதை
புற அகதி நிர்ணய மையங்கள் மட்டுமே  அகதிகளை சரிவரக் கையாள உகந்த முறையாகும்.
நிதர்சனம்
ஹார்வர்ட் அரசின் கீழ் நரூவில்  1500   பேர் புற அகதி நிர்ணயம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மன் நலம் குன்றிய, சுய காயம் செய்ய முயற்சித்து  , மற்றும் பல்வேறு காரணங்களின் கீழ் பாதிக்கப்பட்டார்கள்.2012 இல் மீண்டும் நரூவில் புற அகதி நிர்ணயம் தொடங்கியது. ஓரே ஒரு மன நல ஆலோசகர் மட்டுமே அம்ர்த்தப் பட்டிருக்கிறார் என்பது ஹார்வர்ட் அரசின் நரூக் கொடுமைகளை கவனத்தில் கொள்ளவில்லை இந்த் அரசும் என்பதேயே உணர்த்துகிறது.
புனை கதை
புற அகதி நிர்ணய மையங்கள் நரூவில் இருப்பதே சரியான முறையாகும்.
நிதர்சனம்
நரூவில் உள்ள வாழ்க்கை தரமும் அங்குள்ள அகதி முகாம்களின் சூழலும் மிகக் கேவலமாக இருப்பதாக சர்வதேச அம்னிஸ்டி இயக்கத்தின் அகதி சிறப்பு அதிகாரி கருத்து தெரிவித்திருக்கிறார்.மேலும் இந்த முகாம்கள் வாழத்தகுதி இல்லாத வகையில் அமைந்திருப்பதாகவும்,  அதனால், அங்குள்ள பலர் மன உடல் நலம் குன்றி இருப்பதாகவும் சர்வதேச அம்னிஸ்டி இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது

நரூ 9000 மக்களை 21 சதுர கிலோ மீட்டர் பரப்பில் கொண்டுள்ள குட்டித்தீவு.அங்குள்ள பொருளாதார, சமூக, சட்ட வசதிகள் , அகதி பராமரிப்புக்கு உகந்தது அல்ல.

அகதிகள் ஆஸ்திரேலியாவில் தொடரும் துயரம்

அகதிகள் ஆஸ்திரேலியாவில் தொடரும் துயரம்

ஆஸ்திரேலியா அகதிக் கொள்கைகள் இறுக்கமடைந்து வரும் வரும் வேளையில், அகதிகள் குறித்து சரியான மதிப்பீடு செய்யப்படவில்லை என்ற  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2012 -2013 க்கான அகதி வருகை 5400 என மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அகதி வருகை தாறு மாறாக எகிறியதை தொடர்ந்து இந்த மதிப்பீடு மறு பரிசீலனை செய்யப்பட்டு 12,000 என பெப்ருவரி 2012 இல் மீளறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் இந்த நம்பிக்கையை தகர்ப்பதாக  ஜூன் மாத அகதி வருகை 22,500 ஐ எட்டியது.தொடர்ந்து 2013-2014 க்கான மதிப்பீடு 13,200 என் கணக்கிடப்பட்டது. 2012 ஆகஸ்ட் 13 இன்  ‘சலுகை மறுப்பு’  கொள்கையின் பின் – அதாவது அகதி நிர்ணயம்  ஆஸ்திரேலியாவிற்கு வெளியே என்று தீர்மானிக்கப் பட்டபின், 19,760 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை  மதிப்பீடு செய்யப்பட்டதை விட அதிகமாகும். இந்த எண்கள் ஆஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்படி புள்ளிவிபரங்களைத் தந்த குடிவரவுத் துறை செயலர் மார்ட்டின் பவல்ஸ் இந்த ஆண்டு  ஜூன் 30க்குள் 25000 அகதிகள் வருவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.இதுவரை அரசு 3.2 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளது என்பது பின்புலத் தகவல்.

ஆஸ்திரேலியாவின் அகதிக்கொள்கைகள் அரசியல், கட்சி மாற்றங்கள் நிகழும் போது மாறி வந்திருக்கின்றன.ஜுலியாவின் அரசும் ஹார்வர்டின் அரசும் அகதிக் கொள்கைகளை மாறி மாறி விமர்சனம் செய்தாலும் கூட இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படை அணுகு முறை ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது என்பதே உண்மை.எந்த அரசும் அகதிக் காப்பகமாக ஆஸ்திரேலியா இருப்பதை விட மனித உரிமைக் காவலனாக உலக அளவில் இனம் கண்டுக் கொள்ளப்படுவதையும் , அகதி மாநாட்டின் கையொப்பதாரியாக தன் கடமையை செய்ய தவறவில்லை என்ற நிரூபணம் தவிர வேறு எந்தவித நோக்கத்தையும் இனம் கண்டு கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை.பழைய கள்ளை புதிய மொந்தையில் தருவதைப் போலவே ஒரே அகதி பொதியை வேறு வேறு கட்டமைப்புக்குள் அடக்கி அகதிகளைக் ‘கவனித்த’ன இந்தக் கட்சிகள். பல அகதி நலக் குழுக்களும், அமைப்புகளும் கொடுத்து வரும் குரல்கள் பலனற்றுப் போயின.அகதிப் பிரச்சனை பூதாகரமாக ஆஸ்திரேலியாவில்   உருவாகிக் கொண்டுள்ளது என்பது கண்கூடாகும்.
அகதிகள் அவதரிக்கும் நாடுகளாக் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டுள்ள ஆஃப்கான், சூடான், இலங்கை மக்களுக்கு கிட்டும் வருகை விசாக்கள் கூட  அகதி அச்சத்தால் நியாயமான காரணங்களுக்கு அப்பாற்பட்டு நிராகரிக்கப் பட்டு வருகின்றன.உதாரணமாக   பதூர் , பரகத் என்ற இரு ஆஃப்கானிய இளைஞர்கள் பற்றிய செய்தியை பார்ப்போம். பதூர், துணிச்சலான புகைப்பட பத்திரியாளன். காபூல் அமெரிக்க தூதரகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை பார்த்தவர். தந்து புகைப் படங்களை கண்காட்சியாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா விசா மறுத்ததினால் வர முடியாமல் போனவர்.தொடர்ந்து இவரது பணியில் ஒரு பத்திரியாளராக  விமர்சனங்கள் வெளிபடுத்தியபோது  அச்சுறுத்தல்களே பரிசாக அமைந்தன.



ஆஸ்திரேலியா

கேள்விக்குறியாகும்
டோனி அப்பட்டின் ஆட்சியின் மாட்சி ?
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

இத்தால் சகலருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால்….

டோனி அப்பட்டின் ஆட்சியில் நடக்கும் அதீத மாற்றங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை  உருவாக்கி வருகின்றன. அவரது செயல் பாடுகள் உள்ளூரிலும் உலக அரங்கிலும் பல  நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றி வருகின்றன. ஏனைய உலக நாடுகளைப் போலவே அரசியலில் அடுத்த தலை முறையை வளர்க்கத் தவறியதால், அடுத்த தலைமைக்கு ஆட் பஞ்சம் ஏற்பட்டு விட்டதால் டோனி அப்பட்டின் தலைமையை ஆஸ்திரேலிய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உருவாகி உள்ளது.


ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன டோனி அப்பட்டின் ஆட்சி இன்று என்ன நிலையில் இருக்கிறது?

வெளி விவகாரம்
சீன , ஜப்பானிய உறவு விரிசலில் மூக்கை தேவை இல்லாமல் நுழைத்திருப்பது, வெளிப்படையாக அமெரிக்கவை சார்ந்து ஜப்பானை  ஆதரித்து இருப்பது , வெளி விவகார அமைச்சர் சீனாவை விமர்சித்திருப்பது ஆகியவை திருப்தி தருவதாக இல்லை.

பாலஸ்தீனியத்தை முற்றுமாக மறந்து, சர்வேதச சட்ட நீதி மன்றத்தை அலட்சிய படுத்தி யூத குடியிருப்புகளுக்கு அக்கிர்மிக்கப் பட்ட இடங்களில் அங்கீகாரம் வழங்குதல் போன்றவை சர்ச்சசைக்குரிய செயல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ன.

படகுகளை  திருப்பி விட உங்கள் அனுமதி தேவை இல்லை என்று சொல்லி இந்தோனேசியாவை அவமதித்து ஆகி விட்டாயிற்று. உளவு பார்க்கும் விடயத்தில் சொதப்பல்களை செய்து, கால் நடை வியாபாரத்துக்கும் ஆப்பு இழுத்தாகி விட்டது.

பப்புவா நியூ கினியா தலைமையை பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டியதுடன் மனுஸ் தீவில் உள்ள உள்ளூர் தொழில்களை பயன் படுத்துவதாக சொன்ன வாக்கையும் மீறி விட்டோம்.

கால நிலை மாற்றம்
கார்பன் வரி விதிப்பை விலக்கியிருப்பது , கால நிலை மாற்றம் தொடர்பான அமைப்புகளையும், சுத்தமான சக்தி  நிதி நிறுவனம் அகியவற்றை  மூடியிருப்பது, மற்றும் வோர்சோ   கால நிலை மாற்றம் தொடர்பான பேச்சு  வார்த்தைகளில் எந்த ஒரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாமை, பசுமை காலநிலை நிதியத்திற்கு நிதி ஒதுக்காமை போன்றவை உலக அளவில் விமர்சிக்கப் பட்டவையாகும்.
கடன்
ஐம்பது  பில்லியன் கடன் என்ற லேபரிடம், ’உபரி நிதி’, கடன் அடைத்தல், வரவுக்குள் செலவு   என்று கூவி கூவி விற்று வாக்குகளை வாங்கிய பின் தற்போது 200 பில்லியனுக்கு கடனை உயர்த்திக் கோருவது அந்தர் பல்டியாகும்.
கல்வி
கல்வியே , பொருளாதாரத்தை , உற்பத்தியை, வாழ்க்கை தரத்தை, நல்வாழ்க்கையை பெருக்கும் என்று சமூக  ஆய்வுகள் கரடியாய் கத்தினாலும்  கல்விக்கு  என வழங்கப் படும்  நிதியை முடிவுக்கு கொண்டு வருவது என்று தீயாய் வேலை செய்யும் கல்வி  அமைச்சகம்.
சமூக அமைப்புகள், இலாப நோக்கின்றி செயல் படும் அமைப்புகள், தரும ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படும்  நிதியில் ஆணியை பிடிங்கியாயிற்று.
தொழில் துறை
சுரங்க வரிகளை சுரங்கத் தொழில் சூடு பிடிக்கும் நேரத்தில்   நீக்கி, எதிர்கால வருமானத்தில் மண்ணை போட்டாயிற்று.
கார் தொழிற்சாலைகளுக்கு  உரிய உதவிகள்  வழங்கப்படாததால்  மறைமுகமாக இத்துறையில் ஈடு பட்டுள்ள 230,000 பணிகளுக்கு சங்கு ஊதியாகி விட்டது.
குவாண்ட்டஸ் ஏர்லைன் விரைவில் வெளி நாட்டு  நிறுவனமாகும் சாத்தியம் பக்கத்தில் வந்தாகி விட்டது.
தேசிய அகலக் கற்றை திட்டம் உடைப்பில் போடப் பட்டு விட்டது.

மனித உரிமை
மனித உரிமை மீறல் என்று உலகளாவிய  நகைப்புக்கு இடமாகும் அளவுக்கு அகதிகள் விடயத்தை விபரம் பத்தாமல்  சிறுவர்களை , தாய் பிள்ளைகளை பிரித்த உபயத்தை  செய்து முடித்தாகி விட்டாயிற்று

சோகம்(CHOGM) மா நாட்டில் கலந்து கொண்டது , மனித உரிமை குறித்த ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டினை விமர்சிக்க வைத்துள்ளது. இரண்டு மில்லியன் டாலர் செலவில் ஆயுதம் கொண்ட இரண்டு படகுகளை இலங்கைக்கு  தருவதாக வேறு வாக்களித்திருப்பது பலத்த விமர்சினத்தை உருவாக்கி உள்ளது.

பொது மக்கள்
எனது கொள்கையையே மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால்  ’சாமி கண்ணை குத்தும்’ என்று ஓரின திருமணத்துக்கு ஒப்புதல் வாக்கு அளிக்காமல் டபாய்த்தாகி விட்டது.
கடல் பூங்கா திட்டம் தொடர்பான சட்டங்கள், பள்ளி மாணவர் ஊக்க நிதி, சூப்பர் நிதி உயர்வு, ஓய்வூதியம் பெறுவோர்க்கான  நிதி ஆகியவற்றை மாற்றியது , 19,400 ஆக இருந்த வரி உயர் மட்டத்தையும் சிறு தொழில் சொத்து தொடர்பான சலுகைகளை அகற்றியது

அகதிகள்
ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ’நாமகரணம்’ நடந்தேறியது குடிவரவு அமைச்சகம், புதிய பெயருடன் ’குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு’ அமைச்சகமானது தான்.
’அக்கா வீடு எங்கே ஆத்துக்கு அப்பாலே’ என்ற தொனியில் ஆஸ்திரேலியா எல்லை எங்கே என்று தேடித் தேடி புற எல்லை அகதி நிர்ணயம் அறிமுகப்படுத்தப் பட்டது.
இது தவிர இந்த மாதம் முதல் புது கட்டளையாக ,  முறையில்லா நுழைவினை படகு மூலம் மேற்கொண்டவர் எவரும் தங்கள் குடும்பத்தை உடனடியாக அழைத்துக் கொள்வது சாத்தியமில்லாத அளவுக்கு கால தாமதப் படுத்தும்   கட்டளை  எண் 62 அமுலாக்கப் பட்டுளது. இதன் படி இதுவரை படகு மூலம் கரை தட்டிய  அனைவருக்கும் தங்களின் குடுபத்தினை  அழைக்கும் விசா கால வரையின்றி , தாமதிக்கும். இதுவரை தங்களின் குடுபத்தினை  அழைக்கும் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இதே கதி தான்.
விண்ணப்பங்களை திருப்பி அழைப்பவர்களுக்கு கட்டிய பணம் திருப்பி தரப் பட மாட்டாது, விசா கிட்டவும்  அதிக (வருடங்கள்) காலம் எடுக்கும்.

நியாயமாரே மிச்சம் என்னதான் இருக்கிறது? 

தலையங்கம் 2014 ஜனவரி

அண்மையில் பார்த்த ஆங்கிலத் திரைப்படம் தி கோக்கா கோலா கிட்( The Coco Cola Kid ).
ஆஸ்திரேலிய சினிமா. கோக்கா கோலா நிறுவனம் தனது இலக்கினை எட்ட ஒரு இளம் விற்பனை முகாமைத்துவ நிபுணரை இங்கு ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோக்கா கோலா விற்பனையை உள்ளூர் குளிர் பானம் தடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்து அந்த இளைஞர் அந்த ஊருக்கு வருகிறார்.

அந்த உள்ளூர் குளிர் பான தொழிற்சாலை  நிறுவுனரை சந்தித்து சாம, தான, பேத தண்டங்களைப் பிரயோகித்து பேரம் பேசுகிறார். உள்ளூர் குளிர் பான தொழிற்சாலையை மூடி விட்டு கோக்கா கோலா நிறுவன விற்பனை தொடர் வியாபார உரிமையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்துகிறார்.முடிவில் அந்த உள்ளூர் குளிர் பான தொழிற்சாலை  நிறுவனர் தனது தொழிற்சாலையை குண்டு வைத்து தகர்த்து விடுகிறார் என்பதோடு கதை முடிவடைகிறது.

.ஒரு பலசாலி தனது ரத கஜ துராதி படைகளையும்  சாம தான பேத தண்ட முறைகளையும் பயன் படுத்தி உள்ளூரில் மிகுந்த செல்வாக்குடைய ஒரு நிறுவனத்தை மூடுவதினை விட ஒரு படி மேலே போய் சுய ஆத்ம தர்ப்பணம் என்ற நிலைக்கு தள்ளுவது எந்த விதத்தில் தர்மம்?

இன்றைக்கு உலக அரசியல் இந்த நிலையில் தான் உள்ளது. குறிப்பாக எனக்கு இது இலங்கை  நிலவரத்தினை நினைவூட்டியது.கோக்கா கோலா யார் , உள்ளூர் குளிர் பான நிறுவுனர் எவர் என்பதை சிந்தியுங்கள். நான் சொல்வதின் உண்மை புலப்படும்.